Samacheer Kalvi 4th Tamil Books Chapter 2 6
தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆராய்ந்திடவேண்டும் 6. ஆராய்ந்திட வேண்டும் ‘அடடே! வா, மாணிக்கம். என்ன, இன்றைக்குக் காலையிலேயே வந்து விட்டாயே…!” “ஆமாம், தாத்தா! நேற்று நீங்கள் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் வேறு கதை கேட்கும் ஆவலில் காலையிலேயே வந்துவிட்டேன். சரி, மாணிக்கம் இன்று அருமையான கதையொன்று சொல்கிறேன் கேள். மன்னர் ஒருவர் தம் குதிரையில் ஏறி அமர்ந்தபடி, ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டி, மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டிருந்தார். மன்னரைப் போலவே அவரது குதிரையும் இரக்கக் குணம் கொண்டதாகக் காணப்பட்டது. அக்குதிரையானது சுற்றும் முற்றும் பார்த்தபடியே மன்னரைச் சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது, நாய் ஒன்று காலில் அடிபட்ட காரணத்தால் நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருப்பதைக் குதிரை பார்த்தது. உடனே அந்த நாய்க்கு உதவி செய்திட வேண்டுமென்று மனத்தில் நினைத்தது. அதனால், தன் கனைப்பொலியின் மூலம் மன்னரை அழைத்தது குதிரை. “அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்லவேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது, ‘குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்றார் மன்னர். உடனே தம் பின்னால் வந்துகொண்டிருந்த காவலர்களிடம் அந்த நாயைத் தூக்கித் தாம் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே வைத்திடுமாறு கூறினார். காவலர்களும் அந்த நாயைக் குதிரையின்மீது ஏற்றி மன்னர் முன்னே அமர வைத்தனர். […]
