சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு 2 : நிலத்தோற்றங்கள்
பயிற்சி வினா விடை
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் —— ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை: ஆ) வண்டல் விசிறி
2. குற்றால நீர்வீழ்ச்சி, ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை: இ) சிற்றாறு
3. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ——– ஆகும்.
அ) சர்க்
ஆ) அரட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை: இ) மொரைன்
4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை: இ) சீனா
5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று.
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்கள்
ஈ) கடற்கரைகள்
விடை: ஈ) கடற்கரைகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் ———- என்கிறோம்.
விடை: பாறை சிதைவடைதல்
2. ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் —– எனப்படுகிறது.
விடை: ஆற்று முகத்துவாரம்
3. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ———- பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை: கலஹாரி
4. ஜெர்மனியில் காணப்படும் சர்க் ———– என்று அழைக்கப்படுகிறது.
விடை: கார் சர்க்
5. உலகின் மிக நீண்ட கடற்கரை ——— ஆகும்.
விடை: மியாமி கடற்கரை
II. பொருத்துக.
அ. ஆ
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – அ. பனியாறுகள்
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – ஆ. பர்கான்கள்
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – இ. காயல்
4. பிறை வடிவ மணல் குன்றுகள் – ஈ. பாறைச் சிதைவுகள்
5. வேம்பநாடு ஏரி – உ. குதிரைக் குளம்பு ஏரி
விடைகள்:
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – ஈ. பாறைச் சிதைவுகள்
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – உ. குதிரைக் குளம்பு ஏரி
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – அ. பனியாறுகள்
4. பிறை வடிவ மணல் குன்றுகள் – ஆ. பர்கான்கள்
5. வேம்பநாடு ஏரி – இ. காயல்
IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✔) குறியிடுக.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை : ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க,
1. அரித்தல் வரையறு.
அரித்தல்:
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
2. உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
உட்பாய்த் தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.
3. குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake);
* ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
* நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.
4. பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:
சர்க்
அரெட்டுகள்
‘U’வடிவ பள்ளத்தாக்கு
5. காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
காளான் பாறைகள் :
* பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.
* இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.
6. காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
காயல்கள்:
* கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.
உதாரணம்: கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி
VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.
1. கிளையாறு மற்றும் துணையாறு.

கிளையாறு
ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு.
எடுத்துக்காட்டு: கொள்ளிடம்
துணையாறு
ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஒரு நீரோடை அல்லது ஓர் ஆறு.
எடுத்துக்காட்டு: பவானி
2. ‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.

‘V’ வடிவ பள்ளத்தாக்கு
1. ஆற்றின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றம்.
2. ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும்.
‘U’ வடிவ பள்ளத்தாக்கு
1. பனியாற்றின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றம்.
2. பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு உருவாகின்றது.
3. கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.

கண்டப் பனியாறு
1. கண்டப் பகுதியில் பெரும் பரப்பில் பரவிக் காணப்படும் அடர்ந்த பனிப் படலம் கண்டப் பனியாறு ஆகும்.
2. அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து கண்டப் பனியாறுகள் ஆகும்.
மலைப் பனியாறு
1. மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி நகரும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு ஆகும்.
2. இமயமலைப் பகுதி மற்றும் ஆல்ப்ஸ் மலைப்பகுதி பள்ளத்தாக்கு பனியாறுகள் ஆகும்.
VII. காரணம் தருக.
1. ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில் மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.
2. வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
* ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
* இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.
3. கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்
* கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
* மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.
VIII. பத்தி அளவில் விடை அளிக்க.
1. ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள்:
‘V’ வடிவ பள்ளத்தாக்கு:
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.
நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.
ஆற்று வளைவுகள்:
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.
குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.
2. காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
காளான் பாறைகள் :
* பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.
* இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.
மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படியவைக்கின்றது. இப்படிவுகள் மணல் குன்றுகள் எனப்படும்.
பிறைவடிவ மணல் குன்றுகள்:
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.
காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.
3. அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
அரெட்டுகள் தோற்றம்:
* பனி உருகும்போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.
* அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும்போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.
IX.1. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
(பர்கான், ‘V’ வடிவ பள்ளத்தாக்கு, ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)

விடைகள்:

1.’V’ வடிவ பள்ளத்தாக்கு – வண்டல் விசிறி
2. அரெட் – மொரைன்
3. தனிக்குன்றுகள் – பர்கான்
4. ஓங்கல் – காயல்
2. உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
1. குன்று
2. நீர்வீழ்ச்சி
3. ஆறு அல்லது ஓடை
4. கடற்கரை
2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி:
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.