தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு
வாழ்வியல்: திருக்குறள்
வினைசெயல் வகை
1. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
பொருள் : வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.*
பொருள் : ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அது போல ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.
அணி : உவமை அணி
அவை அஞ்சாமை
3. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
பொருள் : தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.
4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
பொருள் : கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில் பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.
நாடு
5. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.*
பொருள்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
6. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம்தரு நாடு.
பொருள் : பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.
அரண்
7. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
பொருள் : தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
8. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
பொருள் : அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு
இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.
பெருமை
9. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.*
பொருள் : பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை .
10. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பொருள் : உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்க.
1. ——— ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
[விடை : ஆ. வயல்]
2. மக்கள் அனைவரும் ——— ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
[விடை : அ. பிறப்பால்]
3. ‘நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —
அ) நான் + என்ப
ஆ) நா + டென்பது
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டேன்ப
[விடை : இ. நாடு + என்ப]
4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் —
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
[விடை : ஈ. கண்ணில்லது]
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
விடை : 2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
குறு வினா
1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
பொருள், கருவி, காலம், செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தும் ஆராய்ந்து அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
❖ தெளிந்த நீர்
❖ நிலம்
❖ மலை
❖ நிழல் உடைய காடு
– ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரண்கள் ஆகும்.
3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
மிக்க பசி, ஓயாத நோயும், அழிவு செய்யும் பகை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு.
படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.